(1) அணி அணியாக அணிவகுப்பவர்கள் (-வானவர்கள்) மீது சத்தியமாக!
(2) கடுமையாக விரட்டுகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக!
(3) வேதத்தை ஓதுபவர்கள் மீது சத்தியமாக!
(4) நிச்சயமாக உங்கள் கடவுள் ஒருவன்தான்.
(5) (அவன்தான்) வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் (-அதிபதி) ஆவான். இன்னும் (அவன்) சூரியன் உதிக்கும் இடங்களையும் (அது மறையும் இடங்களையும்) நிர்வகிப்பவன் ஆவான்.
(6) நிச்சயமாக நாம் கீழுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அலங்காரத்தால் அலங்கரித்துள்ளோம்.
(7) (இறைவனுக்கு) அடங்காத எல்லா ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் (நட்சத்திரங்களால் வானத்தை அலங்கரித்தோம்).
(8) மிக உயர்ந்த (வானவக்) கூட்டத்தினரின் பக்கம் (அவர்களின் பேச்சை) அவர்களால் செவியுற முடியாது. எல்லா பக்கங்களில் இருந்தும் (அந்த ஷைத்தான்கள் வால் நட்சத்திரங்களால்) எறியப்படுவார்கள்.
(9) (வானத்தை விட்டு) தடுக்கப்படுவதற்காக (அவர்கள் மீது நட்சத்திரங்கள் எறியப்படும்). இன்னும், அவர்களுக்கு (மறுமையில்) நிரந்தரமான தண்டனை உண்டு.
(10) எனினும், (வானவர்களின் பேச்சை) யார் திருட்டுத்தனமாக திருடுகின்றாரோ (கள்ளத்தனமாக ஒட்டுக்கேட்க முயற்சிக்கின்றாரோ) எரிக்கின்ற நெருப்புக் கங்கு அவரை பின்தொடரும்.
(11) அவர்கள் (-மறுமையை மறுப்பவர்கள்) படைப்பால் பலமிக்கவர்களா அல்லது எவர்களை நாம் படைத்தோமோ (அவர்கள் பலமிக்கவர்களா? அதாவது வானம், பூமி, மலைகள், வானவர்கள் போன்ற படைப்புகளா)? என்று அவர்களிடம் விளக்கம் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களை (-மனிதர்களை) பிசுபிசுப்பான (ஒட்டிக்கொள்கின்ற நல்ல) மண்ணிலிருந்து படைத்தோம்.
(12) அன்றி, (நபியே! இந்த குர்ஆன் உமக்கு கொடுக்கப்பட்டபோது) நீர் ஆச்சரியப்பட்டீர். இன்னும் அவர்கள் (உம்மையும் இந்த வேதத்தையும்) கேலி செய்தனர்.
(13) அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் அறிவுரை பெறமாட்டார்கள்.
(14) அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (அதை) பரிகாசம் செய்கிறார்கள்.
(15) தெளிவான சூனியமே தவிர இது வேறில்லை என்று கூறுகின்றனர்.
(16) நாங்கள் இறந்து, எலும்புகளாகவும், (எங்கள் சதை) மண்ணாகவும் மாறிவிட்டால் நிச்சயமாக நாங்கள் (மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படுவோமா?
(17) “இன்னும், எங்கள் முந்திய முன்னோர்களுமா (எழுப்பப்படுவார்கள்)?” (என்று அவர்கள் கேட்கிறார்கள்.)
(18) “ஆம், (நீங்கள் அனைவரும் எழுப்பப்படுவீர்கள். அப்போது) நீங்கள் மிகவும் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள்” என்று கூறுவீராக!
(19) அதுவெல்லாம் (-மறுமை நிகழ்வதெல்லாம்) ஒரே ஒரு பலமான சப்தம்தான். அப்போது அவர்கள் (மறுமையின் காட்சிகளை கண்கூடாகப்) பார்ப்பார்கள்.
(20) எங்கள் நாசமே! என்று அவர்கள் கூறுவார்கள். (அப்போது அவர்களுக்குக் கூறப்படும் ஆம்!) இதுதான் கூலி கொடுக்கப்படும் நாள்.
(21) இதுதான் தீர்ப்பு நாள் ஆகும். இதை நீங்கள் பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்கள்.
(22) அநியாயம் செய்தவர்களையும் அவர்களின் இனத்தவர்களையும் (அவர்களைப் பின்பற்றியவர்களையும் அவர்களைப் போன்று நிராகரித்த மற்றவர்களையும்) இன்னும், அவர்கள் வணங்கி வந்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள்!
(23) அல்லாஹ்வை அன்றி (அவர்கள் வணங்கியவர்களை கொண்டுவாருங்கள்)! ஆக, அவர்களுக்கு நரகத்தின் பாதையின் பக்கம் வழிகாட்டுங்கள்.
(24) அவர்களை நிறுத்துங்கள்! நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
(25) உங்களுக்கு என்ன நேர்ந்தது நீங்கள் உங்களுக்குள் உதவிக் கொள்ளவில்லை?
(26) மாறாக, அவர்கள் இன்று (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்.
(27) அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (தங்கள் இறுதி தங்குமிடத்தைப் பற்றி) விசாரித்துக் கொள்வார்கள்.
(28) அவர்கள் (-வழிகெட்டவர்கள் வழிகெடுத்தவர்களை நோக்கி) கூறுவார்கள்: நன்மையை விட்டுத் தடுக்க நீங்கள் எங்களிடம் வருபவர்களாக இருந்தீர்கள்.
(29) அவர்கள் (-வழிகெடுத்தவர்கள்) கூறுவார்கள்: மாறாக நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
(30) (உங்களை வழிகெடுக்க) எங்களுக்கு உங்கள் மீது எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை. மாறாக, நீங்கள் எல்லை மீறுகின்ற மக்களாக இருந்தீர்கள்.
(31) ஆகவே, நம் மீது நமது இறைவனுடைய (தண்டனையின்) வாக்கு உறுதியாகி விட்டது. நிச்சயமாக நாம் (தண்டனையை) சுவைப்பவர்கள்தான்.
(32) ஆக, நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நிச்சயமாக நாங்கள் வழி கெட்டவர்களாகவே இருந்தோம்.
(33) நிச்சயமாக அவர்கள் (வழிகெட்டவர்களும் வழிகெடுத்தவர்களும்) அந்நாளில் வேதனையில் (ஒன்றாக) கூட்டாகுவார்கள்.
(34) நிச்சயமாக நாம் இப்படித்தான் குற்றவாளிகளுடன் நடந்து கொள்வோம்.
(35) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிச்சயமாக அவர்கள் பெருமை அடி(த்து புறக்கணி)ப்பவர்களாக இருந்தனர்.
(36) பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை நிச்சயமாக நாங்கள் விட்டுவிடுவோமா? என்று அவர்கள் கூறுகின்றனர்.
(37) மாறாக, அவர் (-அந்தத் தூதர்) சத்தியத்தைக் கொண்டு வந்தார். இன்னும் தூதர்களை உண்மைப்படுத்தினார்.
(38) நிச்சயமாக நீங்கள் வலிதரும் வேதனையை சுவைப்பீர்கள்.
(39) நீங்கள் செய்து வந்ததற்கே அன்றி நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
(40) அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் தண்டனையை விட்டும் பாதுகாக்கப்படுவார்கள்.)
(41) அறியப்பட்ட உணவு அவர்களுக்கு உண்டு.
(42) (அதாவது) பழங்கள் (அவர்களுக்கு உண்டு). இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
(43) இன்பமிகு சொர்க்கங்களில் (இருப்பார்கள்).
(44) கட்டில்கள் மீது ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.
(45) மதுரமான தெளிவான நீரைப் போன்ற மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன் அவர்களை சுற்றிவரப்படும்.
(46) அந்த மது வெண்மையாக அருந்துபவர்களுக்கு மிக இன்பமானதாக இருக்கும்.
(47) அதில் (அறிவைப் போக்கக்கூடிய) போதையும் இருக்காது (தலைவலி, வயிற்று வலி இருக்காது.) அவர்கள் அதனால் மயக்கமுறவுமாட்டார்கள்.
(48) அவர்களிடம் பார்வைகளை தாழ்த்திய கண்ணழகிகள் இருப்பார்கள்.
(49) அவர்கள் பாதுகாக்கப்பட்ட (-மறைக்கப்பட்ட தீக்கோழியின்) முட்டையைப் போன்று (-அதன் நிறத்தில்) இருப்பார்கள்.
(50) அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (நரகவாசிகளைப் பற்றி) விசாரிப்பார்கள்.
(51) நிச்சயமாக எனக்கு ஒரு நண்பன் இருந்தான் என்று அவர்களில் கூறக்கூடிய ஒருவர் கூறுவார்.
(52) நிச்சயமாக நீ (தூதர்களை) உண்மைப்படுத்துபவர்களில் இருக்கின்றாயா என்று (உலகில் வாழும் போது என்னிடம்) கூறுவான்.
(53) “நாம் இறந்துவிட்டால் (பின்னர்) எலும்புகளாகவும் மண்ணாகவும் மாறி விட்டால், நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்கு) கூலி கொடுக்கப்படுவோமா?” (என்று அவன் கூறுவான்)
(54) அவர் (-அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: நீங்கள் (நரகத்தில் உள்ளவர்களை) எட்டிப்பார்ப்பீர்களா? (அது முடியுமா?) என்று கூறுவார்.
(55) அவர் (-அந்த நம்பிக்கையாளர் நரகத்தில்) எட்டிப்பார்ப்பார். அவர் அவனை நரகத்தின் நடுவில் பார்ப்பார்.
(56) அவர் (-அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நீ என்னை நாசமாக்குவதற்கு நெருக்கமாக இருந்தாய்.
(57) என் இறைவனின் அருள் இல்லாதிருந்தால் நானும் (நரகத்தில் தண்டனைக்காக) ஆஜர்படுத்தப்படுபவர்களில் ஆகி இருப்பேன்.
(58) “ஆக, (இந்த சொர்க்க வாழ்க்கையில்) நாங்கள் மரணிப்பவர்களாக இல்லையே!”
(59) “எங்கள் முதல் மரணத்தைத் தவிர (வேறு மரணம் எங்களுக்கு இல்லை). இன்னும் நாங்கள் தண்டனை செய்யப்படுபவர்களாக இல்லை.”
(60) நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
(61) அமல் செய்பவர்கள் இது போன்றதற்காக (-இதுபோன்ற நன்மைகளை பெறுவதற்காக) அமல் செய்யட்டும்.
(62) அது (-மேற்கூறப்பட்ட சொர்க்க இன்பங்கள் இறைவனின்) விருந்தோம்பலால் மிகச் சிறந்ததா அல்லது ஸக்கூம் என்ற கள்ளி மரமா?
(63) நிச்சயமாக நாம் இணைவைப்பவர்களுக்கு அதை ஒரு சோதனையாக (தண்டனையாக) ஆக்கினோம்.
(64) நிச்சயமாக அது நரகத்தின் அடியில் முளைக்கின்ற ஒரு மரமாகும்.
(65) அதன் கனிகள் ஷைத்தான்களின் (-பாம்புகளின்) தலைகளைப் போல் (மிக விகாரமாக) இருக்கும்.
(66) நிச்சயமாக அவர்கள் அதிலிருந்து சாப்பிடுவார்கள். இன்னும் அதிலிருந்து (தங்கள்) வயிறுகளை நிரப்புவார்கள்.
(67) பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு அதற்கு மேல் கொதி நீரில் இருந்து கலக்கப்படும். (அவர்கள் உண்ணுகின்ற கள்ளிமர பழத்துடன் கடுமையான உஷ்ணமுள்ள நீரும் கலந்து கொடுக்கப்படும்.)
(68) (கள்ளிப்பழத்தை உண்டு கொதி நீரைக் குடித்த) பிறகு நிச்சயமாக அவர்களின் மீளுமிடம் நரக நெருப்பின் பக்கம்தான் இருக்கும்.
(69) நிச்சயமாக அவர்கள் (-இந்த இணைவைப்பவர்கள்) தங்கள் மூதாதைகளை வழிகெட்டவர்களாக பெற்றார்கள்.
(70) அவர்களின் (-மூதாதைகளின்) அடிச்சுவடுகளில் (அவற்றை கண்மூடித்தனமாக பின்பற்றுவதற்கு) இவர்கள் விரைகின்றார்கள்.
(71) இவர்களுக்கு முன்னர் முன்னோரில் அதிகமானவர்கள் திட்டவட்டமாக வழிகெட்டுள்ளனர்.
(72) திட்டவட்டமாக அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர்களை நாம் அனுப்பினோம்.
(73) ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே) நீர் பார்ப்பீராக!
(74) எனினும், அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்கள் (தண்டனையில் இருந்து) பாதுகாக்கப்படுவார்கள்.
(75) திட்டவட்டமாக நூஹ் நம்மை அழைத்தார். பதில் தருபவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்.
(76) மிகப் பெரிய துக்கத்தில் இருந்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் பாதுகாத்தோம்.
(77) இன்னும், அவரது சந்ததிகளைத்தான் (உலகில்) மீதமானவர்களாக நாம் ஆக்கினோம்.
(78) இன்னும், பிற்காலத்தில் வருபவர்களில் அவரைப் பற்றிய நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.
(79) உலகத்தார்களில் (யாரும் அவரை பழித்துப் பேசாதவாறு) நூஹுக்கு ஸலாம் உண்டாகட்டும்.
(80) நிச்சயமாக நாம் இவ்வாறுதான் நல்லவர்களுக்கு கூலி கொடுப்போம்.
(81) நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.
(82) பிறகு, மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.
(83) நிச்சயமாக அவரது கொள்கையை சேர்ந்தவர்களில் உள்ளவர்தான் இப்ராஹீம்.
(84) அவர் தனது இறைவனிடம் ஈடேற்றம் பெற்ற உள்ளத்துடன் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
(85) தனது தந்தை இன்னும் தனது மக்களை நோக்கி, எதை நீங்கள் வணங்குகிறீர்கள் என்று அவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
(86) அல்லாஹ்வை அன்றி பொய்யாக பல தெய்வங்களையா (உங்கள் தேவைகளுக்கும் வழிபாடுகளுக்கும்) நீங்கள் நாடுகிறீர்கள்?
(87) ஆக, அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன? (அவன் ஒருவனை மட்டும் வணங்காமல் ஏன் கற்பனையாக பல தெய்வங்களை உருவாக்கினீர்கள்?)
(88) ஆக, அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை பார்த்தார்.
(89) தொடர்ந்து அவர் கூறினார், “நிச்சயமாக நான் ஒரு நோயாளி ஆவேன்”.
(90) ஆகவே, அவர்கள் முகம் திரும்பியவர்களாக அவரை விட்டு விலகிச் சென்றனர்.
(91) ஆக, அவர்களின் தெய்வங்கள் பக்கம் (இப்ராஹீம்) விரைந்தார். ஆக, அவர் (அந்த சிலைகளை நோக்கி) கூறினார்: “நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?”
(92) “உங்களுக்கு என்ன ஏற்பட்டது? நீங்கள் ஏன் பேசுவதில்லை?”
(93) ஆக, வலக்கரத்தால் அவற்றை அடி(த்து உடை)ப்பதற்காக அவற்றின் மீது பாய்ந்தார்.
(94) ஆக, அவர்கள் விரைந்தவர்களாக அவர் பக்கம் முன்னோக்கி வந்தனர்.
(95) அவர் கூறினார்: “நீங்கள் (கற்களிலும் கட்டைகளிலும்) எதை செதுக்கி உருவாக்குகிறீர்களோ அதை வணங்குகிறீர்களா?”
(96) “அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் செயல்களையும் படைக்கிறான்.”
(97) அவர்கள் கூறினார்கள்: “அவருக்கு ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள். (அதில் விறகுகளை போட்டு நெருப்பு எரியுங்கள்!) ஆக, அந்த எரியும் நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்!”
(98) ஆக, அவர்கள் அவருக்கு ஒரு சூழ்ச்சியை நாடினர். ஆக, நாம் அவர்களைத்தான் மிகத் தாழ்ந்தவர்களாக ஆக்கினோம்.
(99) இன்னும், அவர் கூறினார்: “நிச்சயமாக நான் என் இறைவனின் பக்கம் செல்கிறேன். அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.”
(100) “என் இறைவா! எனக்கு நல்லவர்களில் ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையைத் தா!”
(101) ஆகவே, மிக சகிப்பாளரான ஒரு குழந்தையைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.
(102) ஆக, (அந்த குழந்தை) அவருடன் உழைக்கின்ற பருவத்தை அடைந்தபோது அவர் கூறினார்: “என் மகனே! நிச்சயமாக நான் உன்னை பலியிடுவதாக கனவில் பார்க்கிறேன். ஆகவே, நீ என்ன கருதுகிறாய் என்று நீ யோசி(த்து சொல்)!” (மகனார்) கூறினார்: “என் தந்தையே! உமக்கு எது ஏவப்படுகிறதோ அதை நீர் நிறைவேற்றுவீராக! இன் ஷா அல்லாஹ் (-அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது) பொறுமையாக இருப்பவர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர்.”
(103) ஆக, அப்போது அவர்கள் இருவரும் (இறைவனின் கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தனர். அவர் அவரை (அவருடைய) கன்னத்தின் மீது கீழே சாய்த்தார்.
(104) இன்னும், “இப்ராஹீமே!” என்று நாம் அவரை அழைத்தோம்.
(105) “திட்டமாக நீர் கனவை உண்மைப்படுத்தினீர். நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.”
(106) நிச்சயமாக இதுதான் தெளிவான சோதனையாகும்.
(107) இன்னும், மகத்தான ஒரு பலிப்பிராணியைக் கொண்டு அவரை விடுதலை செய்தோம்.
(108) இன்னும், பின்னோரில் அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்.
(109) இப்ராஹீமுக்கு ஸலாம் உண்டாகட்டும்.
(110) இப்படித்தான் நல்லவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
(111) நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்.
(112) இன்னும், நல்லவர்களில் ஒருவராகவும் நபியாகவும் இருக்கப்போகின்ற இஸ்ஹாக்கைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.
(113) அவருக்கும் இஸ்ஹாக்கிற்கும் அருள் வளம் புரிந்தோம். இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நல்லவரும் இருக்கிறார். தனக்கு தெளிவாக தீங்கிழைத்தவரும் இருக்கிறார்.
(114) திட்டவட்டமாக மூஸாவிற்கும் ஹாரூனுக்கும் அருள்புரிந்தோம்.
(115) அவ்விருவரையும் அவ்விருவரின் மக்களையும் பெரிய துக்கத்தில் இருந்து பாதுகாத்தோம்.
(116) இன்னும், அவர்களுக்கு உதவினோம். ஆகவே, அவர்கள்தான் வெற்றியாளர்களாக ஆகிவிட்டார்கள்.
(117) இன்னும், அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை கொடுத்தோம்.
(118) இன்னும், அவ்விருவரையும் நேரான பாதையில் நேர்வழி நடத்தினோம்.
(119) இன்னும், பிற்காலத்தில் வருவோரில் அவ்விருவருக்கும் நற்பெயரை ஏற்படுத்தினோம்.
(120) மூஸாவிற்கும் ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாகட்டும்.
(121) நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
(122) நிச்சயமாக அவ்விருவரும் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்கள்.
(123) நிச்சயமாக இல்யாஸ் (நமது) தூதர்களில் உள்ளவர்.
(124) அவர் தனது மக்களுக்கு, “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
(125) ‘பஃல்’ சிலையை நீங்கள் வணங்குகிறீர்களா? மிக அழகிய படைப்பாளனை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா?
(126) உங்கள் இறைவனான, இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவனுமான அல்லாஹ்வை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா?
(127) ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, நிச்சயமாக அவர்கள் (நரகத்தில் தண்டனை அனுபவிக்க) ஆஜர்படுத்தப்படுவார்கள்.
(128) (எனினும்,) அல்லாஹ்வின் பரிசுத்தமான (இணைவைக்காத) அடியார்களைத் தவிர. (அவர்கள் தண்டனையிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்).
(129) இன்னும், பிற்காலத்தில் வருவோரில் அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தினோம்.
(130) இல்யாஸுக்கு(ம் அவரது மக்களில் அவரை பின்பற்றியவர்களுக்கும்) ஸலாம் உண்டாகட்டும்.
(131) நிச்சயமாக நல்லவர்களுக்கு நாம் இப்படித்தான் கூலி கொடுப்போம்.
(132) நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்.
(133) நிச்சயமாக லூத், (நமது) தூதர்களில் ஒருவர்தான்.
(134) அவரையும் அவரது குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றிய சமயத்தை நினைவு கூர்வீராக!
(135) (தண்டனையில்) தங்கி விடுபவர்களில் (ஒருவராக இருந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த) ஒரு மூதாட்டியைத் தவிர.
(136) (அவரையும் முஃமின்களையும் பாதுகாத்த) பிறகு, மற்றவர்களை நாம் அழித்தோம்.
(137) இன்னும், நிச்சயமாக நீங்கள் காலையில் அவர்களை கடந்து செல்கிறீர்கள்.
(138) இரவிலும் (அவர்களை கடந்து செல்கிறீர்கள்). (நபியை நிராகரிப்பவர்களே!) நீங்கள் (இந்த வரலாறுகளை) சிந்தித்து புரியமாட்டீர்களா?
(139) நிச்சயமாக யூனுஸ், (நமது) தூதர்களில் உள்ளவர்தான்.
(140) (பொருள்களால்) நிரம்பிய கப்பலை நோக்கி அவர் ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராக!
(141) ஆக, (அவர் சென்ற கப்பல் நின்றுவிடவே) அவர் சீட்டு குலுக்கிப் போட்டார். ஆக, குலுக்கலில் பெயர் எடுக்கப்பட்டவர்களில் அவர் ஆகிவிட்டார். (அவரது பெயர் எழுதப்பட்ட சீட்டு வந்தது.)
(142) ஆக, (அவர் தன்னை கடலில் எறியவே) அவரை திமிங்கிலம் விழுங்கியது. அவர் (தனது இறைவனின் கட்டளை இன்றி கடலுக்கு சென்றதால்) பழிப்புக்குரிய செயலை செய்தவர் ஆவார்.
(143) ஆக, நிச்சயமாக அவர் அல்லாஹ்வை அதிகம் (தொழுது) துதிப்பவர்களில் இருந்திருக்கவில்லை என்றால்,
(144) அதனுடைய வயிற்றில் (மக்கள் மறுமையில்) எழுப்பப்படுகின்ற நாள் வரை தங்கி இருந்திருப்பார்.
(145) ஆக, (அருகிலிருந்த) பெருவெளியில் அவரை எறிந்தோம். அவர் நோயுற்றவராக இருந்தார்.
(146) இன்னும், அவருக்கு அருகில் ஒரு சுரைக்காய் செடியை முளைக்க வைத்தோம்.
(147) இன்னும், ஒரு இலட்சம் அல்லது அதை விட அதிகமானவர்களுக்கு (தூதராக) அவரை அனுப்பினோம்.
(148) ஆக, அவர்கள் நம்பிக்கை கொண்டனர். ஆகவே, நாம் அவர்களுக்கு ஒரு காலம் வரை சுகமளித்தோம்.
(149) ஆகவே, (நபியே! நீர்) அவர்களிடம் (-இந்த மக்காவாசிகளிடம்) விளக்கம் கேட்பீராக! உமது இறைவனுக்கு பெண் பிள்ளைகளும், அவர்களுக்கு ஆண் பிள்ளைகளுமா?
(150) வானவர்களை பெண்களாகவா நாம் படைத்தோம், அவர்கள் (அதை) பார்த்துக் கொண்டு (அங்கு ஆஜராகி) இருந்தார்களா?
(151) அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தங்களது பெரும் பொய்யில் ஒன்றாக கூறுகிறார்கள்:
(152) “அல்லாஹ் குழந்தை பெற்றெடுத்தான்” என்று. நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் ஆவர்.
(153) ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளை அவன் (தனக்கு) தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
(154) உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இவ்வாறு) எப்படி தீர்ப்பளிக்கிறீர்கள்?
(155) ஆக, நீங்கள் நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?
(156) அல்லது, உங்களிடம் தெளிவான ஆதாரம் (ஏதும்) இருக்கிறதா?
(157) ஆக, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் (கூற்றுக்கு ஆதாரமாக இருக்கின்ற) வேதத்தைக் கொண்டு வாருங்கள்.
(158) அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் ஓர் உறவை அவர்கள் ஏற்படுத்தினர். நிச்சயமாக அவர்கள் (நரகத்தில்) ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று திட்டவட்டமாக அந்த ஜின்கள் அறிந்து கொண்டனர்.
(159) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
(160) (எனினும்,) அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் நரகத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.)
(161) ஆக, நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குகின்றவையும்,
(162) அதன் மூலம் (யாரையும்) நீங்கள் வழிகெடுப்பவர்களாக இல்லை,
(163) யார் நரகத்தில் எரிந்து பொசுங்குவாரோ அவரைத் தவிர. (நரகவாசிகள் என்று முடிவாகிவிட்டவர்களைத்தான் நீங்கள் வழிகெடுக்க முடியும்.)
(164) (வானவர்கள் கூறுவார்கள்:) “எங்களில் (யாரும்) இல்லை அவருக்கு ஒரு குறிப்பிட்ட தகுதி இருந்தே தவிர.”
(165) இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் (அல்லாஹ்வை வணங்குவதற்காக) அணிவகுத்து நிற்பவர்கள்.
(166) இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் (அல்லாஹ்வை) துதித்து தொழுபவர்கள்.
(167) நிச்சயமாக (இந்த மக்காவாசிகள்) கூறுபவர்களாக இருந்தனர்:
(168) “நிச்சயமாக முன்னோரிடம் இருந்த வேதம் எங்களிடம் இருந்திருந்தால்,
(169) நாங்களும் அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களாக ஆகியிருப்போம்.”
(170) ஆக (அது வந்த பின்னர் இப்போது) அவர்கள் அதை நிராகரித்து விட்டனர். (தங்கள் முடிவை) அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
(171) திட்டவட்டமாக நமது வாக்கு தூதர்களான நமது அடியார்களுக்கு முந்திவிட்டது.
(172) நிச்சயமாக அவர்கள்தான் உதவப்படுவார்கள்.
(173) நிச்சயமாக நமது இராணுவம்தான் வெற்றி பெறுவார்கள்.
(174) ஆகவே, (நபியே) அவர்களை விட்டு சிறிது காலம் வரை விலகி இருப்பீராக!
(175) இன்னும், (நபியே!) அவர்களைப் பார்ப்பீராக! (அவர்களுக்கு இறங்கப் போகும் தண்டனையை அவர்கள்) விரைவில் பார்ப்பார்கள்.
(176) ஆக, அவர்கள் நமது தண்டனையை அவசரமாக வேண்டுகின்றனரா?
(177) ஆக, அது அவர்களின் முற்றத்தில் (அதிகாலையில்) இறங்கிவிட்டால் எச்சரிக்கப்பட்டவர்களின் (அந்த) அதிகாலை மிக கெட்டதாக இருக்கும்.
(178) சிறிது காலம் வரை அவர்களை விட்டு விலகி இருப்பீராக!
(179) இன்னும், (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராக! ஆக, (அவர்களுக்கு இறங்கப் போகின்ற தண்டனையை) விரைவில் அவர்கள் பார்ப்பார்கள்.
(180) கண்ணியத்தின் அதிபதியான உமது இறைவன் அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மிக பரிசுத்தமானவன்.
(181) இறைத்தூதர்களுக்கு ஸலாம் உண்டாகுக!
(182) அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கு எல்லாப் புகழும் உரித்தாகுக!