(1) (தீயோரின் உயிர்களைக்) கடுமையாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!
(2) (நல்லோரின் உயிர்களை) மென்மையாக கைப்பற்றுவோர் மீது சத்தியமாக!
(3) நீந்துவோர் மீது சத்தியமாக!
(4) (இறைக் கட்டளையை நிறைவேற்ற) முந்துவோர் மீது சத்தியமாக!
(5) காரியத்தை நிர்வகிப்போர் மீது சத்தியமாக! (நீங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவீர்கள்.)
(6) பூமி(யும் மலையும் பலமாக) அதிர்ச்சி யுறுகின்ற நாளில்...
(7) பின்தொடரக்கூடியது அதைத் தொடரும்.
(8) அந்நாளில், (சில) உள்ளங்கள் நடுங்கும்.
(9) அவற்றின் பார்வைகள் (பயத்தால்) கீழ்நோக்கும்.
(10) (நிராகரிப்போர்) கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?”
(11) (அதுவும்) உக்கிப்போன எலும்புகளாக நாம் மாறி இருந்தாலுமா?
(12) அவ்வாறாயின், அது நஷ்டமான திரும்புதல் என்று (கேலியாகக்) கூறுகிறார்கள்.
(13) (மறுமையாகிய) அதுவெல்லாம் ஒரே ஓர் அதட்டல் (சப்தம்) தான்.
(14) அப்போது அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) பூமியின் மேற்பரப்பில் (ஒன்று சேர்க்கப்பட்டு) இருப்பார்கள்.
(15) (நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?
(16) “துவா” (எனும்) பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்த சமயத்தை (நினைவு கூருங்கள்).
(17) ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறினான்.
(18) ஆக, (மூஸாவே!) நீர் (அவனிடம்) கூறுவீராக! “(ஃபிர்அவ்னே!) நீ (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைவதற்கு உனக்கு விருப்பமா?”
(19) “இன்னும், உன் இறைவனின் பக்கம் உனக்கு நான் நேர்வழி காட்டுவதற்கும், நீ (அவனைப்) பயந்து கொள்வதற்கும் உனக்கு விருப்பமா?”
(20) (மூஸா) மிகப்பெரிய அத்தாட்சியை அவனுக்குக் காண்பித்தார்.
(21) ஆனால், அவன் பொய்ப்பித்தான், இன்னும் மாறுசெய்தான்.
(22) பிறகு (நிராகரிப்பில் மேலும்) முயன்றவனாக (மூஸாவை விட்டு) விலகினான்.
(23) இன்னும் (மக்களை) ஒன்று சேர்த்து கூவி அழைத்தான்.
(24) நான் தான் மிக உயர்வான உங்கள் இறைவன் எனக் கூறினான்.
(25) ஆகவே, இம்மை, மறுமையின் தண்டனையைக் கொண்டு அல்லாஹ் அவனைப் பிடித்தான்.
(26) (அல்லாஹ்வைப்) பயப்படுகிறவருக்கு நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது.
(27) (மனிதர்களே!) படைப்பால் நீங்கள் மிகக் கடினமானவர்களா? அல்லது வானமா? (அல்லாஹ்தான்) அதை (-வானத்தை) அமைத்தான்.
(28) அதன் முகட்டை உயர்த்தினான், இன்னும் அதை ஒழுங்குபடுத்தினான்.
(29) இன்னும் அதன் இரவை இருளாக்கினான், அதன் பகலை (ஒளியுடன்) வெளியாக்கினான்.
(30) இன்னும் பூமியை அதன் பின்னர், (அதை) விரித்தான்.
(31) அதிலிருந்து அதன் நீரையும், இன்னும் அதன் மேய்ச்சலையும் வெளியாக்கினான்.
(32) இன்னும் மலைகளை (அதில் அவற்றை) நிறுவினான்.
(33) உங்களுக்கும் இன்னும் உங்கள் கால்நடைகளுக்கும் பலன் தருவதற்காக (இவற்றைப் படைத்தான்).
(34) ஆகவே, (ஒரு நாளில் மறுமையின்) மிகப்பெரிய பயங்கரமான அழிவு வந்தால்,
(35) மனிதன் தான் செய்ததை நினைத்துப் பார்க்கின்ற (அந்)நாளில்,
(36) (அந்நாளில்) காண்பவருக்கு நரகம் வெளியாக்கப்படும்.
(37) ஆகவே, யார் வரம்பு மீறினானோ,
(38) இன்னும் (அற்பமான) உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்தானோ,
(39) நிச்சயமாக நரகம்தான் (அவனுக்கு) தங்குமிடம் ஆகும்.
(40) ஆகவே, யார் தன் இறைவனுக்கு முன் (தான்) நிற்கின்ற நாளைப் பயந்து, (தீய) இச்சையை விட்டு ஆன்மாவைத் தடுத்தானோ,
(41) நிச்சயமாக சொர்க்கம்தான் (அவனுக்கு) தங்குமிடம் ஆகும்.
(42) (நபியே!) மறுமையைப் பற்றி, எப்போது அது நிகழும் என உம்மிடம் கேட்கிறார்கள்.
(43) (எப்போது நிகழுமென) அதைக் கூறுவதற்கு எதில் நீர் இருக்கிறீர்? (உமக்கு அந்த ஞானம் இல்லையே!)
(44) உம் இறைவன் பக்கம்தான் அதன் முடிவு (இருக்கிறது).
(45) (நபியே!) நீரெல்லாம் அதைப் பயப்படுகிற வரை (அச்சமூட்டி) எச்சரிப்பவரே. (தவிர அது வரும் காலத்தை அறிவிப்பவரல்ல.)
(46) அதை அவர்கள் (கண்ணால்) காணுகின்ற நாளில், நிச்சயமாக ஒரு (நாளின்) மாலை அல்லது அதன் முற்பகலைத் தவிர (இவ்வுலகில் அவர்கள்) தங்கவில்லை (என்பது) போன்றே (அவர்களுக்குத் தோன்றும்).