(1) (நபியே! அகிலங்கள் அனைத்தையும்) படைத்த உம் இறைவனின் பெயரால் படிப்பீராக!
(2) அவன் மனிதனைக் கருவிலிருந்து படைத்தான்.
(3) படிப்பீராக! இன்னும் உம் இறைவன் பெரும் கண்ணியவான் ஆவான்.
(4) அவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான்.
(5) மனிதனுக்கு அவன் அறியாததைக் கற்பித்தான்.
(6) அவ்வாறல்ல! நிச்சயமாக மனிதன் (நிராகரிப்பிலும் பாவத்திலும்) எல்லை மீறுகிறான்,
(7) (காரணம், இறையருளை விட்டுத்) தன்னைத் தேவையற்றவனாக எண்ணியதால்.
(8) நிச்சயமாக மீட்சி உம் இறைவனின் பக்கம்தான் இருக்கிறது.
(9) (நபியே!) தடுப்பவனை நீர் பார்த்தீரா?
(10) ஓர் அடியாரை அவர் தொழும்போது அவன் தடுக்கிறான்.
(11) நீர் பார்த்தீரா! அவர் நேர்வழியில் இருந்தாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
(12) அல்லது, அவர் நன்மையை ஏவினாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?
(13) பார்த்தீரா? அவன் பொய்ப்பித்தால், இன்னும் புறக்கணித்தால்,
(14) நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
(15) அவ்வாறல்ல! (அவன் தனது தீய செயல்களிலிருந்து) விலகவில்லையெனில் நெற்றி முடியைக் கடுமையாகப் பிடிப்போம். (பின்னர், அவனை நரகத்தில் வீசி எறிவோம்).
(16) பொய் கூறுகின்ற, குற்றம் புரிகின்ற (அவனுடைய) நெற்றி முடியை (பிடித்து நரகத்தில் எறிவோம்).
(17) ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
(18) நரகத்தின் காவலாளிகளை நாம் அழைப்போம்.
(19) அவ்வாறல்ல, அவனுக்குக் கீழ்ப்படியாதீர்! (உம் இறைவனுக்குச்) சிரம் பணிவீராக! (அவனளவில்) நெருங்குவீராக!