(1) போர்வை போர்த்தியவரே!
(2) எழுவீராக! எச்சரிப்பீராக!
(3) உமது இறைவனை பெருமைப்படுத்துவீராக!
(4) உமது ஆடையை சுத்தப்படுத்துவீராக!
(5) சிலைகளை விட்டு விலகுவீராக!
(6) (உமது அமல்களை) நீர் பெரிதாக கருதி, (உமது இறைவனுக்கு முன்னால் உமது அமல்களை) சொல்லிக் காண்பிக்காதீர்!
(7) உமது இறைவனுக்காக நீர் பொறுமையாக இருப்பீராக!
(8) எக்காளத்தில் ஊதப்பட்டால்,
(9) அது அந்நாளில் மிக சிரமமான ஒரு நாள் ஆகும்.
(10) அது நிராகரிப்பாளர்களுக்கு இலகுவானதல்ல.
(11) என்னையும் நான் எவனை தனியாக (-அவனுக்கு எவ்வித செல்வமும் சந்ததியும் இல்லாதவனாக அவனது தாய் வயிற்றில்) படைத்தேனோ அவனையும் விட்டு விடுவீராக!
(12) இன்னும், (அவன் பிறந்து ஆளான பிறகு) அவனுக்கு நான் விசாலமான செல்வத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன்.
(13) இன்னும் (அவனுடன் எப்போதும்) ஆஜராகி இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளை (நான் அவனுக்கு கொடுத்தேன்).
(14) அவனுக்கு மிகுந்த வசதிகளை ஏற்படுத்தினேன்.
(15) பிறகு, (அவனுக்கு இன்னும் பல வசதிகளை) நான் அதிகப்படுத்த வேண்டுமென்று அவன் ஆசைப்படுகின்றான்.
(16) அவ்வாறல்ல. நிச்சயமாக அவன் நமது வசனங்களுக்கு முரண்படக் கூடியவனாக (அவற்றை மறுப்பவனாக, அவற்றை மீறுபவனாக) இருந்தான்.
(17) விரைவில் அவனை மிகப் பெரிய சிரமத்திற்கு நான் நிர்ப்பந்தித்து விடுவேன்.
(18) நிச்சயமாக அவன் யோசித்தான். இன்னும் திட்டமிட்டான்.
(19) அவன் எப்படி திட்டமிட்டான். அவன் அழியட்டும்.
(20) பிறகு, அவன் எப்படி திட்டமிட்டான். அவன் அழியட்டும்.
(21) பிறகு, அவன் தாமதித்தான்.
(22) பிறகு, முகம் சுளித்தான். இன்னும், கடுகடுத்தான்.
(23) பிறகு, அவன் புறக்கணித்தான்; பெருமையடித்தான்.
(24) அவன் கூறினான்: இது (சூனியக்காரர்களிடமிருந்து) கற்றுக்கொள்ளப்பட்ட சூனியமே தவிர (வேறு) இல்லை.
(25) இது மனிதர்களின் சொல்லே தவிர (வேறு) இல்லை.
(26) “ஸகர்”நரகத்தில் அவனை நான் விரைவில் பொசுக்குவேன்.
(27) ஸகர் என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா?
(28) அது (தன்னில் யாரையும்) வாழவைக்காது, (செத்துவிடுவதற்கும் யாரையும்) விட்டுவிடாது.
(29) அது தோல்களை கரித்துவிடும்.
(30) அதன் மீது பத்தொன்பது வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள்.
(31) நரகத்தின் காவலாளிகளை வானவர்களாகவே தவிர (வேறு யாரையும்) நாம் ஆக்கவில்லை. நிராகரித்தவர்களுக்கு ஒரு குழப்பமாகவே தவிர அவர்களின் எண்ணிக்கையை நாம் ஆக்கவில்லை. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதை) உறுதி கொள்ளவேண்டும் என்பதற்காகவும், நம்பிக்கை கொண்டவர்கள் நம்பிக்கையால் அதிகரிப்பதற்காகவும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும் தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்களும் நிராகரிப்பாளர்களும் இதன் மூலம் அல்லாஹ் என்ன உதாரணத்தை நாடுகின்றான் என்று கூறுவதற்காகவும் (அவர்களின் எண்ணிக்கையை நாம் பத்தொன்பதாக ஆக்கினோம்). இவ்வாறுதான், அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிகெடுக்கின்றான்; தான் நாடுகின்றவர்களை நேர்வழி செலுத்துகின்றான். உமது இறைவனின் இராணுவங்களை அவனைத் தவிர (யாரும்) அறிய மாட்டார்கள். இது (-நரகம்) மனிதர்களுக்கு ஒரு நினைவூட்டலே தவிர (வேறு) இல்லை.
(32) அவ்வாறல்ல. சந்திரன் மீது சத்தியமாக!
(33) இரவின் மீது சத்தியமாக, அது முடியும் போது!
(34) அதிகாலை மீது சத்தியமாக, அது ஒளி வீசும் போது!
(35) நிச்சயமாக அது (-நரகம்) மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்.
(36) அது (-நரகம்) மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடியதாகும்.
(37) உங்களில் யார் (வழிபாட்டில்) முன்னேறுவதற்கு நாடினாரோ அவருக்கு அல்லது (நன்மையில்) பின் தங்கி (பாவத்தில் இருந்து) விடுவதற்கு நாடினாரோ அவருக்கு (இந்த நரகம் எச்சரிக்கை செய்யக்கூடியதாக இருக்கும்).
(38) ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்ததற்காக பிடிக்கப்படும். (-விசாரிக்கப்பட்டு செயலுக்கு தகுந்த கூலி அதற்கு கொடுக்கப்படும்)
(39) வலது பக்கம் உள்ளவர்களைத் தவிர. (அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்.)
(40) அவர்கள் சொர்க்கங்களில் தங்களுக்குள் கேட்டுக் கொள்வார்கள்,
(41) பாவிகளைப் பற்றி.
(42) (பாவிகளே) உங்களை ஸகர் நரகத்தில் நுழைத்தது எது?
(43) அவர்கள் (-பாவிகள்) கூறுவார்கள்: “தொழுகையாளிகளில் நாங்கள் இருக்கவில்லை.
(44) இன்னும் ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாக நாங்கள் இருக்கவில்லை.
(45) வீணான காரியங்களில் ஈடுபடுவோருடன் சேர்ந்து நாங்கள் வீணான காரியங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தோம்.
(46) கூலி (கொடுக்கப்படும்) நாளை பொய்ப்பிப்பவர்களாக நாங்கள் இருந்தோம்.
(47) இறுதியாக, எங்களுக்கு மரணம் வந்தது.
(48) பரிந்துரை செய்பவர்களின் பரிந்துரை அவர்களுக்கு பலனளிக்காது.
(49) ஆக, அவர்களுக்கு என்ன ஆனது, இந்த அறிவுரையை விட்டு புறக்கணித்து செல்கிறார்கள்?
(50) தப்பித்து ஓடுகிற பயந்துபோன கழுதைகளைப் போல் அவர்கள் இருக்கிறார்கள்,
(51) அவை (வேட்டையாடுவதற்காக பாய்ந்து வருகிற) சிங்கத்திடமிருந்து விரண்டோடுகின்றன.
(52) மாறாக, அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட ஏடுகள் தனக்கு தரப்பட வேண்டும் என்று நாடுகின்றனர்.
(53) அவ்வாறல்ல. (-அவ்வாறு கொடுக்கப்பட்டாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.) மாறாக, அவர்கள் மறுமையை பயப்படுவதில்லை. (ஆகவேதான், அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.)
(54) அவ்வாறல்ல. (-இந்த குர்ஆன் சூனியமும் அல்ல, மனிதர்களின் கூற்றும் அல்ல. மாறாக,) நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்.
(55) ஆக, யார் நாடுவாரோ இதன் மூலம் அவர் உபதேசம் பெறுவார்.
(56) அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் உபதேசம் பெறமாட்டார்கள். அவன்தான் (படைப்புகள் அவனை) அஞ்சுவதற்கும் (படைப்புகளை அவன்) மன்னிப்பதற்கும் மிகத் தகுதியானவன்.