(1) வேதக்காரர்கள் இன்னும் இணைவைப்போர் ஆகிய நிராகரிப்பாளர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி வருகின்ற வரை (இறைவனின் தூதர் வந்தால், அவரைப் பின்பற்றுவோம் என்ற கொள்கை யிலிருந்து) விலகியவர்களாக இருக்கவில்லை.
(2) (அந்தச் சான்று) பரிசுத்தமான ஏடுகளை ஓதுகின்ற அல்லாஹ் விடமிருந்து (அனுப்பப்பட்டுள்ள முஹம்மது எனும்) தூதர் ஆவார்.
(3) அவற்றில் (அந்த வேத ஏடுகளில்) நேரான (நீதியான) சட்டங்கள் உள்ளன.
(4) வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களிடம் தெளிவான சான்று வந்த பின்னர் தவிர (நபியைப் பின்பற்றுவோம் என்ற தங்கள் கொள்கையிலிருந்து) பிரியவில்லை.
(5) இணைவைப்பை விட்டு விலகியவர்களாக, வழிபாட்டை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக அல்லாஹ்வை வணங்குவதற்கும், தொழுகையை நிலைநிறுத்துவதற்கும் ஸகாத்தைக் கொடுப்பதற்கும் தவிர (வேறெதற்கும்) அவர்கள் ஏவப்படவில்லை. இதுதான் நேரான (நீதியான சட்டங்களுடைய) மார்க்கமாகும்.
(6) நிச்சயமாக வேதக்காரர்கள் இன்னும் இணைவைப்போர் ஆகிய நிராகரிப்பாளர்கள் ஜஹன்னம் நெருப்பில் அதில் நிரந்தர மானவர்களாக இருப்பார்கள். இவர்கள் தான் படைப்புகளில் மகா தீயோர்.
(7) நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தவர்கள்தான் படைப்புகளில் மிகச் சிறந்தோர்.
(8) அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடம் அத்ன் எனும் சொர்க்கங்களாகும். அவற்றின் கீழே நதிகள் ஓடுகின்றன. அவற்றில் எப்போதும் (அவர்கள்) நிரந்தர மானவர்களாக இருப்பார்கள். அல்லாஹ் அவர்களைப் பற்றி திருப்தி அடைவான். அவர்களும் அவனைப் பற்றி திருப்தி அடைவார்கள். இது தன் இறைவனைப் பயந்தவருக்கு (கிடைக்கும் பாக்கியமாகும்).