(1) நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களின் பக்கம் (தூதராக) அனுப்பினோம், நீர் உமது மக்களை வலி தரக்கூடிய தண்டனை அவர்களுக்கு வருவதற்கு முன்னர் எச்சரிப்பீராக!
(2) அவர் கூறினார்: என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.
(3) அதாவது, நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனை அஞ்சுங்கள்! எனக்கு கீழ்ப்படியுங்கள்!
(4) அவன் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; குறிப்பிட்ட தவணை வரை அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வந்துவிட்டால் அது பிற்படுத்தப்படாது. நீங்கள் (இதை) அறிபவர்களாக இருக்க வேண்டுமே!
(5) அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக நான் எனது மக்களை இரவிலும் பகலிலும் அழைத்தேன்.
(6) எனது அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்த வில்லை (அவர்கள் எனது அழைப்பை விட்டு) விரண்டு ஓடுவதைத் தவிர.
(7) நீ அவர்களை மன்னிப்பதற்காக நிச்சயமாக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் அவர்கள் தங்கள் விரல்களை தங்கள் காதுகளில் ஆக்கிக் கொண்டனர். (என்னை அவர்கள் பார்க்காமல் இருப்பதற்காக தங்களை) தங்கள் ஆடைகளால் மூடிக்கொண்டனர். இன்னும் (நிராகரிப்பில்) பிடிவாதம் பிடித்தனர். இன்னும் பெருமையடித்தனர்.
(8) பிறகு, நிச்சயமாக நான் அவர்களை உரக்க (பகிரங்கமாக) அழைத்தேன்.
(9) பிறகு நிச்சயமாக நான் அவர்களிடம் வெளிப்படையாகப் பேசினேன். இன்னும் அவர்களிடம் தனியாக, இரகசியமாகப் பேசினேன்.
(10) நான் கூறினேன்: நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக இருக்கின்றான்.
(11) அவன் உங்களுக்கு மழையை தாரை தாரையாக அனுப்புவான்.
(12) இன்னும், உங்களுக்கு செல்வங்களாலும் ஆண் பிள்ளைகளாலும் உதவுவான். இன்னும், உங்களுக்கு தோட்டங்களை ஏற்படுத்துவான். இன்னும், நதிகளை உங்களுக்கு ஏற்படுத்துவான்.
(13) உங்களுக்கு என்ன ஆனது அல்லாஹ்வின் கண்ணியத்தை நீங்கள் பயப்படுவதில்லை?
(14) திட்டமாக அவன் உங்களை பல நிலைகளாக (பல கட்டங்களாக -இந்திரியம், இரத்தக்கட்டி, சதைத்துண்டு இப்படியாக ஒரு நிலைக்குப் பின் ஒரு நிலையாக இறுதியில் முழு மனிதனாக) படைத்(து முடித்)தான்.
(15) ஏழு வானங்களை அடுக்கடுக்காக அல்லாஹ் எப்படி படைத்தான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
(16) அவற்றில் சந்திரனை ஒளியாக அவன் ஆக்கினான். இன்னும், சூரியனை விளக்காக ஆக்கினான்.
(17) அல்லாஹ்தான் உங்களை பூமியில் இருந்து முளைக்க வைத்தான். (மண்ணிலிருந்து உருவாக்கினான்.)
(18) பிறகு, அவன் உங்களை அதில்தான் மீட்பான். இன்னும் (அதிலிருந்து) அவன் உங்களை வெளியேற்றுவான்.
(19) அல்லாஹ் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான்.
(20) அதில் நீங்கள் விசாலமான பல பாதைகளில் செல்வதற்காக.
(21) நூஹ் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்தனர். இன்னும் எவனுடைய செல்வமும் பிள்ளையும் நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அவனுக்கு அதிகப்படுத்தவில்லையோ அவனையே இவர்கள் பின்பற்றினர். (வசதிபடைத்த தலைவர்களைத்தான் அவர்கள் பின்பற்றினார்கள்.)
(22) இன்னும் மிகப் பெரிய சூழ்ச்சி செய்தார்கள்.
(23) இன்னும் கூறினார்கள்: நீங்கள் நிச்சயமாக உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள். இன்னும் வத்து, சுவாஃ, யகூஸ், யவூக், நஸ்ர் ஆகிய தெய்வங்களை விட்டு விடாதீர்கள்.
(24) அவர்கள் (-சமுதாயத் தலைவர்கள்) பலரை வழி கெடுத்தனர். (இறைவா!) அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டைத் தவிர நீ அதிகப்படுத்தாதே!
(25) அவர்களுடைய பாவங்களால் அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டார்கள். பிறகு, நரகத்தில் நுழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வை அன்றி அவர்கள் தங்களுக்கு உதவியாளர்களை காணவில்லை.
(26) நூஹ் கூறினார்: என் இறைவா! நிராகரிப்பாளர்களில் வசிக்கின்ற எவரையும் பூமியில் நீ (அழிக்காமல்) விட்டு விடாதே!
(27) நிச்சயமாக நீ அவர்களை (உயிருடன்) விட்டு விட்டால் (நம்பிக்கை கொண்ட) உனது அடியார்களை அவர்கள் வழிகெடுத்து விடுவார்கள். பாவியை, மிகப் பெரிய நிராகரிப்பாளனைத் தவிர (நல்லவர்களை) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள். (தாங்கள் பெற்றெடுக்கின்ற பிள்ளைகளையும் வழிகெடுத்து விடுவார்கள்.)
(28) என் இறைவா! என்னையும் என் பெற்றோரையும் நம்பிக்கையாளராக என் வீட்டில் நுழைந்து விட்டவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் மன்னிப்பாயாக! அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர அதிகப்படுத்தாதே!