55 - ஸூரா அர்ரஹ்மான் ()

|

(1) 1. (நபியே! அல்லாஹ்தான்) அளவற்ற அருளாளன்,

(2) 2. (அவன்தான்) இந்த குர்ஆனை (உங்களுக்குக்) கற்றுக் கொடுத்தான்.

(3) 3. அவனே மனிதனைப் படைத்தான்.

(4) 4. அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான்.

(5) 5. சூரியனும் சந்திரனும் (அவற்றுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே (செல்கின்றன).

(6) 6. செடிகள், (கொடிகள்,) மரங்கள் (ஆகிய அனைத்தும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டுச்) சிரம் பணிகின்றன.

(7) 7,8. அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான். ஆகவே, நீங்கள் நிறுவையில் அநியாயம் செய்யாதீர்கள்.

(8) 7,8. அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான். ஆகவே, நீங்கள் நிறுவையில் அநியாயம் செய்யாதீர்கள்.

(9) 9. ஆகவே, நீங்கள் நீதமாக நிறுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்.

(10) 10. படைப்புகள் வசித்திருக்க வசதியாகப் பூமியை அமைத்தான்.

(11) 11. அதில் (பலவகை) கனிவர்க்கங்களும் (குலைகள் நிறைந்த) பாளைகளை உடைய பேரீச்சை மரங்களும் உற்பத்தியாகின்றன.

(12) 12. உமியால் மூடப்பட்ட தானியங்களும், வாசனைப் புற்பூண்டுகளும் உண்டாகின்றன.

(13) 13. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(14) 14. சுட்ட பாத்திரத்தைப் போல் (அதை தட்டும்போது ‘கன் கன்' என்று) சப்தமிடும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான்.

(15) 15. நெருப்பின் கொழுந்தினால் அவன் ஜின்னைப் படைத்தான்.

(16) 16. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(17) 17. (சூரியன், சந்திரன் இரண்டும்) உதிக்கும் இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன். மேலும், (அவை) மறைகின்ற இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன்.

(18) 18. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(19) 19. இரு கடல்களையும் அவை சந்தித்துக் கொள்ளுமாறு அவனே இணைத்தான்.

(20) 20. ஆயினும், அவை இரண்டுக்கிடையில் ஒரு தடுப்புண்டு. (அத்தடுப்பை) அவ்விரண்டும் மீறாது.

(21) 21. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(22) 22. அவ்விரு கடல்களிலிருந்தே முத்து, பவளம் (போன்றவை) உற்பத்தியாகின்றன.

(23) 23. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(24) 24. கடலில் மலைகளைப் போல செல்லும் உயர்ந்த கப்பல்களும் அவனுக்குரியனவே.

(25) 25. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(26) 26. பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தேபோகும்.

(27) 27. மிக கண்ணியமும் பெருமையும் உடைய உமது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும்.

(28) 28. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(29) 29. வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றன. (அவன் செயலற்றிருக்கவில்லை.) ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேலையில் இருக்கிறான்.

(30) 30. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(31) 31. (மனித, ஜின் ஆகிய) இரு வகுப்பார்களே! நிச்சயமாக அதிசீக்கிரத்தில் நாம் உங்களை கவனிக்க முன்வருவோம்.

(32) 32. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(33) 33. மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் இன்னும் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், (அவற்றை ஆட்சி புரியக்கூடிய) மிகப் பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது.

(34) 34. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(35) 35. (நீங்கள் அவற்றை விட்டும் வெளிப்பட விரும்பிச் சென்றால்) உங்கள் மீது அக்னி ஜூவாலையும், உருக்கப்பட்ட செம்பும் எறியப்படும். அதை நீங்கள் தடுத்துக்கொள்ள முடியாது.

(36) 36. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(37) 37. (யுக முடிவுக்காக) வானம் பிளக்கும் சமயத்தில் அது (ஜைத்தூன்) எண்ணெய்யைப் போல் ரோஜா வர்ணமாகிவிடும்.

(38) 38. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(39) 39. அந்நாளில், மனிதனிடமும், ஜின்னிடமும் அவர்களின் பாவத்தைப் பற்றிக் கேட்கப்பட மாட்டாது. (அவர்களின் குறிப்பைக் கொண்டே அறிந்து கொள்ளப்படும்.).

(40) 40. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(41) 41. குற்றவாளிகள், அவர்களின் முகக் குறியைக் கொண்டே அறிந்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய உச்சி மயிரையும், பாதங்களையும் பிடிக்கப்(பட்டு பின்னர், நரகத்தில் தூக்கி எறியப்)படும்.

(42) 42. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(43) 43. இதுதான் குற்றவாளிகள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரகம்.

(44) 44. இதற்கும், கொதித்த தண்ணீருக்கும் இடையில் (இரு தலைக்கொள்ளியில் சிக்கிய எறும்பைப் போல் அவர்கள்) சுற்றித் திரிவார்கள்.

(45) 45. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(46) 46. எவன் தன் இறைவனின் சந்திப்பைப் பற்றிப் பயப்படுகின்றானோ, அவனுக்குச் (சொர்க்கத்தில்) இரு சோலைகள் உண்டு.

(47) 47. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(48) 48. அவ்விரண்டும், கிளைகள் அடர்ந்து நிறைந்த மரங்களை உடைய சோலைகள்.

(49) 49. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(50) 50. அவ்விரண்டிலும் இரு ஊற்றுக்கள் ஓடிக் கொண்டே இருக்கும்.

(51) 51. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(52) 52. அவ்விரண்டிலும் ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் (உலர்ந்தும், பச்சையுமாக) இரு வகை உண்டு.

(53) 53. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(54) 54. 'இஸ்தப்ரக்' என்னும் பட்டு விரிப்பின் மீது (உள்ள பஞ்சணைகளில்) சாய்ந்தவர்களாய் இருப்பார்கள். அவ்விரு சோலைகளில் கனிவர்க்கங்கள் அடர்ந்திருக்கும்.

(55) 55. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(56) 56. அவற்றில், கீழ் நோக்கிய பார்வையையுடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர், அவர்களை மனிதர்களோ ஜின்களோ தீண்டியதில்லை.

(57) 57. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(58) 58. அவர்கள், சிகப்பு மாணிக்கத்தைப்போலும் பவளங்களைப்போலும் இருப்பார்கள்.

(59) 59. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(60) 60. (உங்களின்) நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?

(61) 61. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(62) 62. இவ்விரண்டைத் தவிர, (சொர்க்கத்தில் அவர்களுக்கு) மேலும் இரு சோலைகளுண்டு.

(63) 63. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(64) 64. அவ்விரண்டும், கரும் பச்சை நிறமுடையன.

(65) 65. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(66) 66. அவ்விரண்டிலும், தொடர்ந்து பொங்கிக்கொண்டே இருக்கின்ற இரு ஊற்றுக்கண்கள் உண்டு.

(67) 67. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(68) 68. அவ்விரண்டிலும், (பலவகை) கனிகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.

(69) 69. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(70) 70. அவற்றில், சிறந்த குணமுடைய அழகிகள் உள்ளனர்.

(71) 71. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(72) 72. (அவர்கள்தான்) ‘ஹூர்' (என்னும் வெந்நிற) கண்ணழகிகள் (முத்து மற்றும் பவளங்களால் ஆன) கூடாரங்களில் வசித்திருப்பார்கள்.

(73) 73. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(74) 74. இவர்களுக்கு முன்னர் அப்பெண்களை, மனிதர்களோ ஜின்களோ தீண்டியதில்லை.

(75) 75. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(76) 76. (அவர்களின் கணவர்கள்) சிறந்த பசுமையான, இரத்தினக் கம்பளங்களில் திண்டு தலையணைகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

(77) 77. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

(78) 78. (நபியே!) மிக்க சிறப்பும், கண்ணியமும் உள்ள உமது இறைவனின் திருப்பெயர் மிக பாக்கியமுடையது.