79 - ஸூரா அந்நாஸிஆத் ()

|

(1) 1. (பாவிகளின் உயிர்களைப்) பலமாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!

(2) 2. (நல்லவர்களின் ஆத்மாவை) எளிதாகக் கைப்பற்றுபவர்கள் மீது சத்தியமாக!

(3) 3. (ஆகாயத்திலும், கடலிலும்) அதிவேகமாக(ப் பறந்து) நீந்திச் செல்லும் வானவர்கள் மீது சத்தியமாக!

(4) 4. (இறைவனின் கட்டளையை நிறைவேற்ற) போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்பவர்கள் மீதும் சத்தியமாக!

(5) 5. எல்லாக் காரியங்களையும் (இறைவனின் கட்டளைப்படி) நிர்வகிக்கின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக!

(6) 6. (கொடிய பூகம்பத்தால் பூமி) பலமாக அதிர்ச்சியுறும் நாளில்,

(7) 7. (மேலும்) அதைத் தொடர்ந்து (பல பூகம்ப அதிர்ச்சிகள்) வரும் (நாளில் உலகம் முடிவுற்றே தீரும்).

(8) 8. அந்நாளில், உள்ளங்களெல்லாம் திடுக்கிட்டு நடுங்கிக் கொண்டிருக்கும்.

(9) 9. பார்வைகளெல்லாம் (பயத்தால்) கீழ்நோக்கி நிற்கும்.

(10) 10. (இவ்வாறிருக்க, நிராகரிப்பவர்கள் இதை மறுத்து) ‘‘நாம் (இறந்த பின்னர்) மெய்யாகவே நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?''

(11) 11. (அதுவும்) நாம் உக்கி எலும்பாகப் போனதன் பின்னரா (உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம்?) என்று கூறுகின்றனர்.

(12) 12. ‘‘அவ்வாறாயின், அது பெரும் நஷ்டமான மீட்சிதான் என்றும் அவர்கள் (பரிகாசமாகக்)'' கூறுகின்றனர்.

(13) 13. (இது அவர்களுக்கு அசாத்தியமாகத் தோன்றலாம்; எனினும், நமக்கோ) அது ஓர் அதட்டல் (ஒரு உறுத்தல், ஒரு சப்தம்)தான்.

(14) 14. உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்றெழுந்து) வந்து ஒரு திடலில் கூடிவிடுவார்கள்.

(15) 15. (நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு எட்டியதா?

(16) 16. ‘துவா' என்னும் பரிசுத்தமான ஓடைக்கு அவருடைய இறைவன் அவரை அழைத்ததை நினைவு கூறுங்கள்.

(17) 17. ‘‘ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.

(18) 18. (அவனிடம்) கூறுவீராக! ‘‘(பாவங்களை விட்டும்) நீ பரிசுத்தவானாக ஆக உனக்கு விருப்பம் தானா?

(19) 19. (அவ்வாறாயின்) உன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய வழியை நான் உனக்கு அறிவிக்கிறேன். அவனுக்கு நீ பயந்துகொள்'' (இவ்வாறு, மூஸாவுக்கு இறைவன் கட்டளையிட்டான்).

(20) 20. (மூஸா அவனிடம் சென்று அவ்வாறு கூறிப்) பெரியதொரு அத்தாட்சியையும் அவனுக்குக் காண்பித்தார்.

(21) 21. (எனினும்) அவனோ, அதைப் பொய்யாக்கி (அவர் கூறியதற்கு) மாறு செய்தான்.

(22) 22. பின்னர் (அவரை விட்டும்) விலகி (அவருக்குத் தீங்கிழைக்கவும்) முயற்சி செய்தான்.

(23) 23. இதற்காக(த் தன் மக்களை) ஒன்று கூட்டி (அவர்களுக்கு) அறிக்கையிட்டான்.

(24) 24. (அவர்களை நோக்கி) ‘‘நான்தான் உங்கள் மேலான இறைவன்'' என்று கூறினான்.

(25) 25. ஆதலால், அல்லாஹ் அவனை இம்மை மறுமையின் வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டான்.

(26) 26. பயப்படுபவர்களுக்கு மெய்யாகவே இதில் ஒரு நல்ல படிப்பினை இருக்கிறது.

(27) 27. (மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அவ்வானத்தைப் படைத்தான்.

(28) 28. அவனே அதன் முகட்டை உயர்த்தி, அதை ஒழுங்குபடுத்தினான்.

(29) 29. அவனே, அதன் இரவை இருளாக்கி(ச் சூரியனைக் கொண்டு) அதன் பகலை வெளியாக்கி (வெளிச்சமாக்கி)னான்.

(30) 30. இதற்குப் பின்னர், அவனே பூமியை விரித்தான்.

(31) 31. அவனே அதிலிருந்து நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகிறான்.

(32) 32. மலைகளையும் அவனே (அதில்) உறுதியாக ஊன்றினான்.

(33) 33. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கக்கூடியவையாக (அவற்றை அதில் அமைத்தான்).

(34) 34. (மறுமையின்) பெரும் அமளி வந்தால்,

(35) 35. மனிதன் செய்ததெல்லாம் அந்நாளில் அவனுடைய ஞாபகத்திற்கு வந்துவிடும்.

(36) 36. மனிதர்கள் கண் முன் நரகம் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடும்.

(37) 37. எவன் வரம்பு மீறினானோ,

(38) 38. (மறுமையைப் புறக்கணித்து) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொண்டானோ,

(39) 39. அவன் செல்லும் இடம் நிச்சயமாக நரகம்தான்.

(40) 40. எவன் தன் இறைவனின் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத்தடுத்துக் கொண்டானோ,

(41) 41. அவன் செல்லுமிடம் நிச்சயமாக சொர்க்கம்தான்.

(42) 42. (நபியே!) மறுமையைப் பற்றி, அது எப்பொழுது வருமென உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.

(43) 43. (எப்பொழுது வருமென்று) எதற்காக நீர் கூற வேண்டும்?

(44) 44. அதன் முடிவெல்லாம், உமது இறைவனிடமே இருக்கிறது.

(45) 45. அந்நாளைப் பற்றிப் பயப்படக்கூடியவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை. (அது வரும் காலத்தையும், நேரத்தையும் அறிவிப்பது உமது கடமையல்ல.)

(46) 46. அதை அவர்கள் கண்ணால் காணும் நாளில், மாலையிலோ அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமே தவிர (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்றே அவர்களுக்குத் தோன்றும்.