77 - ஸூரா அல்முர்ஸலாத் ()

|

(1) 77.1. குதிரையின் பிடரி மயிரைப்போன்று தொடர்ந்து வரக்கூடிய காற்றுகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கிறான்.

(2) 77.2. அவன் கடுமையான புயல் காற்றுகளைக்கொண்டு சத்தியம் செய்கிறான்.

(3) 77.3. மழையைப் பரப்பிவிடும் காற்றுகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கிறான்.

(4) 77.4. சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காட்டக்கூடியதைக் கொண்டு இறங்கும் வானவர்களைக் கொண்டு அவன் சத்தியம் செய்கிறான்.

(5) 77.5. வஹியைக்கொண்டு இறங்கும் வானவர்களைக்கொண்டு அவன் சத்தியம் செய்கிறான்.

(6) 77.6. அல்லாஹ் மக்களுக்கு வழிகாட்டியதற்கு ஆதாரமாக அமைவதற்காகவும் மக்களை அவனுடைய வேதனையிலிருந்து எச்சரிப்பதற்காகவும் வானவர்கள் வஹியைக் கொண்டு இறங்குகிறார்கள்.

(7) 77.7. நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்படுபவையான மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவது, விசாரணை செய்வது, கூலி வழங்குவது போன்றவை சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக நிறைவேறியே தீரும்.

(8) 77.8. தம் ஒளியை நட்சத்திரங்கள் இழந்துவிடும்போது,

(9) 77.9. வானவர்கள் இறங்குவதால் வானம் பிளந்துவிடும்போது,

(10) 77.10. மலைகள் அவற்றின் இடங்களிலிருந்து பெயர்க்கப்பட்டு தூசி போன்று தூள் தூளாக்கப்படும்போது,

(11) 77.11. தூதர்கள் குறிப்பிட்ட நேரத்திற்காக ஒன்றுதிரட்டப்படும்போது,

(12) 77.12. அந்த மகத்தான நாளுக்காக, தம் சமூகங்களுக்கு எதிராக சாட்சி கூறுவதற்காக அவர்கள் தாமதப்படுத்தப்பட்டார்கள்.

(13) 77.13. அடியார்களிடையே தீர்ப்பு வழங்கப்படும் நாளுக்காக, அந்நாளில் அசத்தியவாதிகளில் சத்தியவாதிகள் யார்? துர்பாக்கியசாலிகளில் நற்பாக்கியசாலிகள் யார்? என்பது தெளிவாகிவிடும்.

(14) 77.77.14. -தூதரே!- தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

(15) 77.15. அல்லாஹ்விடமிருந்து தூதர்கள் கொண்டு வந்ததை மறுத்தோருக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.

(16) 77.16. நாம் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதர்களை பொய்ப்பித்த முந்தைய சமூகங்களை அழிக்கவில்லையா?

(17) 77.17. பின்னர் பின்னால் வரும் மறுப்பாளர்களை அவர்களைப் பின்தொடரச் செய்தோம். நாம் முந்தையவர்களை அழித்ததைப்போன்றே அவர்களையும் அழிப்போம்.

(18) 77.18. அந்த சமூகங்களை நாம் அழித்ததுபோன்றே முஹம்மது கொண்டுவந்த தூதை மறுக்கும் குற்றவாளிகளையும் அழிப்போம்.

(19) 77.19. பாவிகளுக்கு தண்டனையிருப்பதாக அல்லாஹ்வின் எச்சரிக்கையை மறுப்போருக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.

(20) 77.20. -மனிதர்களே!- நாம் உங்களை அற்பமான சிறிதளவு நீரான விந்திலிருந்து படைக்கவில்லையா?

(21) 77.21. அந்த அற்ப நீரை நாம் பாதுகாப்பான இடமான பெண்ணின் கருவறையில் வைத்தோம்,

(22) 77.22. குறிப்பிட்ட தவணையான கர்ப்ப காலம் முடியும் வரை.

(23) 77.23. குழந்தையின் பண்பு, அளவு, நிறம் மற்றும் இன்னபிறவற்றையும் நாம் நிர்ணயித்தோம். அவையனைத்தையும் நிர்ணயம் செய்யும் நாமே சிறந்தவர்களாகிவிட்டோம்.

(24) 77.24. அல்லாஹ்வின் ஆற்றலை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.

(25) 77.25. நாம் பூமியை மனிதர்கள் அனைவரையும் அணைத்துக் கொள்ளக்கூடியதாக ஆக்கவில்லையா?

(26) 77.26. அது அவர்களில் உயிருடன் உள்ளோரை அதன் மீது வாழ்தல் மற்றும் அதனை வளப்படுத்தல் மூலமும் தன்னில் அடக்கம் செய்யப்படுவதன் மூலம் இறந்தவர்களையும் அணைத்துக் கொள்கிறது.

(27) 77.27. அது ஆட்டம் கண்டுவிடாமல் தடுத்து அதில் உறுதியான, உயரமான மலைகளையும் நாம் ஏற்படுத்தினோம். -மனிதர்களே!- நாம் உங்களுக்குச் சுவையான நீரை புகட்டுகின்றோம். இவற்றையெல்லாம் படைத்தவன் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கு இயலாதவன் அல்ல.

(28) 77.28. அல்லாஹ் தம்மீது பொழிந்த அருட்கொடைகளை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.

(29) 77.29. தம் தூதர்கள் கொண்டுவந்ததை மறுத்தவர்களிடம் கூறப்படும்: -“பொய்யாக்கியோரே!- நீங்கள் பொய்யாக்கிக்கொண்டிருந்த வேதனையின்பால் செல்லுங்கள்.

(30) 77.30. மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நரகப் புகையின் நிழலின்பால் செல்லுங்கள்.

(31) 77.31. அது குளிர்ச்சி தரும் நிழலல்ல. அது நரகத்தின் தீச்சுவாலையோ, வெப்பமோ உங்களை அடைவதை விட்டும் தடுக்காது.

(32) 77.32. நிச்சயமாக நரகம் தீப்பொறிகளை வீசி எறியும். ஒவ்வொரு தீப்பொறியும் பெரும் கோட்டையைப் போன்று பெரிதாக இருக்கும்.

(33) 77.33. அவ்வாறு வீசி எறியும் தீப்பொறிகள் கருப்பு நிறத்தில், அதன் பிரமாண்டத்தில் கருப்புநிற ஒட்டகங்களைப் போன்றும் இருக்கும்.

(34) 77.34. அல்லாஹ்வின் வேதனையை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.

(35) 77.35. இது அவர்கள் எதையும் பேச முடியாத நாளாகும்.

(36) 77.36. அவர்கள் தங்கள் இறைவனிடம் தாங்கள் செய்த நிராகரிப்பான, பாவமான காரியங்களுக்கு சாக்குப்போக்குகள் கூற அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் அவனிடம் நியாயம் கூறுவார்கள்.

(37) 77.37. இந்த நாள் பற்றிய செய்திகளை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.

(38) 77.38. இது படைப்பினங்களிடையே தீர்ப்பளிக்கப்படும் நாளாகும். நாம் உங்களையும் முந்தைய சமூகங்களையும் ஒரு மைதானத்தில் ஒன்றுதிரட்டுவோம்.

(39) 77.39. உங்களால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தந்திரம் செய்து தப்பிக்க முடிந்தால் எனக்கு தந்திரம் செய்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

(40) 77.40. தீர்ப்பு நாளை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.

(41) 77.41. நிச்சயமாக தம் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் அடர்ந்த மரங்களுடைய சுவனத்தின் தோட்டங்களின் நிழலிலும் சுவையான ஓடக்கூடிய நீரோடையிலும் இருப்பார்கள்.

(42) 77.42. அவர்கள் உண்ண விரும்பும் பழங்களையும் (அவர்கள் பெறுவார்கள்).

(43) 77.43. அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்காக தூய்மையானவற்றை உண்ணுங்கள், எவ்வித கலப்படமுமற்ற இன்பம் தரும் பானத்தைப் பருகுங்கள்.

(44) 77.44. நிச்சயமாக நாம் உங்களுக்குக் அளித்த இக்கூலியைப் போன்றே நற்செயல்கள் புரிபவர்களுக்குக் கூலி அளிக்கின்றோம்.

(45) 77.45. அல்லாஹ் இறையச்சமுடையோருக்கு தயார் செய்திருப்பவற்றை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.

(46) 77.46. மறுப்பாளர்களிடம் கூறப்படும்: “உலகில் குறுகிய காலம்வரை உண்ணுங்கள். வாழ்வின் இன்பங்களை அனுபவியுங்கள். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதர்களை பொய்யாக்கியதனால் குற்றவாளிகளாக இருக்கின்றீர்கள்.

(47) 77.47. மறுமை நாளில் அவர்களுக்கு கூலி வழங்கப்படும் என்பதை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.

(48) 77.48. இந்த பொய்ப்பிப்பாளர்களிடம் “அல்லாஹ்வுக்காக தொழுங்கள்” என்று கூறப்பட்டால் அவர்கள் அவனுக்காக தொழுவதில்லை.

(49) 77.49. அல்லாஹ்விடமிருந்து தூதர்கள் கொண்டுவந்தவற்றை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.

(50) 77.50. தங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட இந்த குர்ஆனின்மீது அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையெனில் வேறு எந்த செய்தியைத்தான் அவர்கள் நம்பிக்கைகொள்ளப் போகிறார்கள்.