(1) 88.1. -தூதரே!- தன் பயங்கரங்களால் மக்களை சூழ்ந்துகொள்ளக்கூடிய மறுமை நாளின் செய்தி உம்மிடம் வந்ததா?
(2) 88.2. மறுமை நாளில் மனிதர்கள் நற்பாக்கியசாலிகள் அல்லது துர்பாக்கியசாலிகளாக இருப்பார்கள். துர்பாக்கியசாலிகளின் முகங்கள் இழிவடைந்தவையாக, அடிபணிந்தவையாக இருக்கும்.
(3) 88.3. இழுத்துச் செல்லப்படும் சங்கிலிகளாலும் மாட்டப்படும் விலங்குகளாலும் அவை கஷ்டப்பட்டு களைத்துப் போனவையாக இருக்கும்.
(4) 88.4. அந்த முகங்கள் வெப்பமிக்க நெருப்பில் பிரவேசித்து அதன் சூட்டை அனுபவிக்கும்.
(5) 88.5. கடுமையாக கொதிக்கும் நீருற்றிலிருந்து அவர்கள் தண்ணீர் புகட்டப்படுவார்கள்.
(6) 88.6. காய்ந்தால் விஷமாக மாறிவிடும் ஷிப்ரக் என்று சொல்லப்படும் செடியிலிருந்து வழங்கப்படும் அறுவறுப்பான உணவைத்தவிர வேறு எந்த உணவும் அவர்களுக்கு வழங்கப்படாது.
(7) 88.7. அது உண்பவரை கொழுக்க வைக்காது, அவரது பசியையும் போக்காது.
(8) 88.8. அந்நாளில் நற்பாக்கியசாலிகளின் முகங்கள் அருட்கொடைகளைப் பெறுவதனால் பொலிவானவையாக, மகிழ்ச்சியானவையாக, அருள் சொறிந்தவையாக இருக்கும்.
(9) 88.9. உலகில் தாம் செய்த செயல்களைக் கொண்டு அவை திருப்தியடைந்திருக்கும். அவை தமது நற்செயல்களுக்கான கூலி பல மடங்காக சேமிக்கப்பட்டிருப்பதைக் கண்டுகொள்ளும்.
(10) 88.10. உயர்ந்த அந்தஸ்தும் இடமும் உடைய சுவனத்தில் இருக்கும்.
(11) 88.11. அவை சுவனத்தில் தடைசெய்யப்பட்ட வார்த்தையைச் செவிமடுப்பது ஒரு புறமிருக்க வீணான மற்றும் பொய்யான வார்த்தைகளைச் செவியுறாது.
(12) 88.12. அந்த சுவனத்தில் வெடித்து ஓடக்கூடிய ஓர் நீருற்று இருக்கும். அவர்கள் நாடியவாறு அதனை ஓடச் செய்வார்கள்.
(13) 88.13. அங்கு உயர்ந்த கட்டில்கள்.
(14) 88.14. பருகுவதற்காக தயார் செய்து வைக்கப்பட்ட குவளைகளும்.
(15) 88.15. வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட தலையணைகளும்.
(16) இங்குமங்கும் விரிக்கப்பட்ட பல அதிகமான விரிப்புக்கள் அதிலுண்டு.
(17) 88.17. ஒட்டகத்தை அல்லாஹ் எவ்வாறு படைத்து அதனை மனிதனுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்? என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
(18) 88.18. வானத்தை எவ்வாறு அவர்கள் மீது விழாதவாறு அவர்களுக்கு மேலே பாதுகாப்பான கூரையாக அவன் உயர்த்திவைத்துள்ளான் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
(19) 88.19. பூமி மக்களால் ஆட்டம் காணாமல் இருக்க எவ்வாறு மலைகளை நட்டி அதனை உறுதிப்படுத்தியுள்ளான் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
(20) 88.20. பூமியை எவ்வாறு அவன் விரித்து மனித வாழ்வுக்கேற்றவாறு அதனைத் தயார்செய்து வைத்துள்ளான் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
(21) 88.21. தூதரே! இவர்களுக்கு அறிவுரை வழங்குவீராக. அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எச்சரிக்கை செய்வீராக. நீர் அறிவுரை வழங்கக்கூடியவர்தாம். அதைத்தவிர உம்மீது எந்தப் பொறுப்பும் இல்லை. நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது.
(22) 88.22. நீர் அவர்களை நம்பிக்கைகொள்ளுமாறு நிர்ப்பந்திப்பதற்கு நீர் அவர்களின் பொறுப்பாளர் அல்ல.
(23) 88.23. ஆயினும் அவர்களில் யார் நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணித்து அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தாரோ.
(24) 88.24. அல்லாஹ் மறுமைநாளில் அவரை நரகத்தில் நிரந்தரமாக பிரவேசிக்கச் செய்து கடும் வேதனையை அளிப்பான்.
(25) 88.25. நிச்சயமாக அவர்கள் மரணித்தபிறகு நம் பக்கமே திரும்ப வேண்டும்.
(26) 88.26. பின்னர் அவர்களின் செயல்களுக்குக் கணக்கு வாங்குவது நம்மீது மட்டுமுள்ள கடமையாகும். அது உமக்கோ ஏனையவர்களுக்கோ உரியதல்ல.